திருவள்ளூர்: இந்திய நாடே வியக்கும் வகையில் வரும் ஏப்ரல் இறுதிக்குள் 9 முதல் 12-வது வரையிலான வகுப்புகள் கணணி மயமாக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், நாளை (27-02-2019) முதல் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்வை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவித்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு 15 லட்சத்து 80 ஆயிரம் இலவச மடிக்கணினிகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.