சென்னை: கோயில்களில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை இருக்கிறதா? என்று அறநிலையத்துறை ஆய்வாளர்கள் விசாரணை நடத்துகின்றனர். அதன்பிறகு மாவட்ட கமிட்டியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் ெதரிவித்தார்.தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் 49,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கமிஷனர் சார்பில் ₹2 லட்சம் முதல் ₹10 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள 672 கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.