சென்னை: இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன், ‘பெளர்ணமி’ யான இன்று இரவு 9.23 மணி அளவில் நிகழ உள்ளது. சாதாரண நாட்களில் நிலவு தெரிவதை விட இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், பூமிக்கு அருகிலும் தோன்றும். இதனை வெறும் கண்களால் நாம் காண முடியும். குறிப்பாக, இன்று இரவு வானில் தோன்றும் சூப்பர் மூன், சாதாரண நாட்களில் நமக்கு தெரியும் நிலவின் அளவினை விட 14 சதவீதம் மிகப்பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாகவும் இருக்கும். பூமிக்கு மிக அருகில் தோன்றும் இந்த நிலவு போல் இந்த ஆண்டு எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாது. குறிப்பாக இந்த நிலவு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மிகச்சிறப்பாக தெரியும். இந்தியாவில் இது மிகவும் தெளிவாகவும், அற்புதமாகவும் தெரியும். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியிலும், மும்பையில் 6.30 மணிக்கும், கொல்கத்தாவில் 5.20 மணிக்கும் தெரியும். இந்த சூப்பர் மூனின் முழு வடிவத்தையும் இரவு 9.23 மணியளவில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.