சென்னை: காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை கொண்டு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளர் உத்தரவுப்படி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் கமிஷனர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்த அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.