ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி 177வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் நேதாஜி காலனி 2வது பிரதான தெரு முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்களை கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடைந்த மேன்ஹோல்கள் மீது தொடர்ச்சியாக வாகனங்கள் சென்றதால், தற்போது, சில இடங்களில் மேன்ஹோல்கள் முற்றிலும் உடைந்து சாலை நடுவே ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.