சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு புறப்படத் தயாராகி கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல்காதர் (35) என்பவர் துபாய் செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தார். பயணிகள் 194 பேர் இருந்தனர். அப்போது அப்துல்காதருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். ஆனால் அப்துல் காதர் மயங்கி சாய்ந்து விட்டார். இதையடுத்து விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் நுழைந்து பரிசோதித்தனர். அதில் அப்துல்காதர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.