பாலக்காடு: கோவையில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.2 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், பாலக்காடு ரயில் நிலையத்தில் நேற்று ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் ஷாஜி தலைமையிலான போலீசார் பயணிகளிடம் பரிசோதனை நடத்தினர். பகல் 12.20 மணி அளவில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் வந்தது. போலீசார் ரயிலில் ஏறி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது கோவையில் இருந்து கொல்லம் செல்வதற்காக ஏறிய 5 வாலிபர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தனியாக அழைத்து சென்று, அவர்கள் அணிந்திருந்த ஓவர்கோட்டுகளை கழற்றி சோதனை செய்தபோது, அதில், புத்தம் புதிய 500, 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் அடங்கிய ரூ.2 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.