ஆலங்குளம் அருகே ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே காஸ் குடோனில் பதுங்கிய ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், அம்பை சாலையில் தனியாருக்கு சொந்தமான காஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஆந்தை ஒன்று வந்து நின்றது. வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான முறையில் காணப்பட்ட இந்த ஆந்தையை பார்த்த தொழிலாளர்கள், ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் வீரர்கள் முருகன், கோபால குமரேசன், முத்துராஜ் ஆகியோர் விரைந்து சென்று குடோனில் பதுங்கிய ஆந்தையை பிடித்தனர். பிடிபட்ட ஆந்தை ஆஸ்திரேலிய இனத்தைச் சேர்ந்தது என தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல் மூலம் வரும் மரத்தடிகளில் இதுபோல் ஆந்தைகள் பதுங்கி வந்திருக்கலாம் என்றும், லாரிகள் மூலம் ஆலங்குளம் வழியாக செங்கோட்டை, பாவூர்சத்திரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது இப்பகுதியில் பறந்து பதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிடிபட்ட ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆலங்குளம் ராமர் கோயில் வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: