சென்னை: குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூன்று பேர் 3வது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய தமிழகத்தை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், மத்திய அரசு அதிகாரிகள் என பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.