திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அனுமதியின்றி இயங்கிய தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிர்வாகி கைது செய்யப்பட்டார். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் 15 சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. திருவண்ணாமலை ரமணா நகர் விரிவாக்கம் மகாசக்தி நகரில் அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடப்பதாகவும், இங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த காப்பகத்தில் கலெக்டர் கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் வந்து சோதனை நடத்தியதில் 2 கம்யூட்டர்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதில் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதைத்தொடர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்த 8 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார்(31) என்பவர் காப்பகத்தில் மேலாளராக வேலை செய்தது தெரியவந்தது. இவர் காப்பக நிர்வாகியும் நண்பருமான நந்தகுமார்(35) என்பவருடன் சேர்ந்து காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.