போபால்: நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்தி நடிகை கரீனா கபூர் பதிலளித்துள்ளார். தற்போதைய மத்திய அரசின் ஆட்சி காலம் சில மாதங்களில் முடியவுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதியை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் இந்தி நடிகை கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். போபால் மக்களவைத் தொகுதியில் கரீனா கபூரை போட்டியிட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.