சென்னை: காவல்நிலையத்தில் அடிதடி வழக்கில் தொடர்புடைய தம்பியை போலீசில் அண்ணனே பிடித்துக்கொடுத்தார்.விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், முத்துசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (21). இவர் மீது திருத்தங்கல் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ள நிலையில் போலீசில் சரணடையாமல் சென்னைக்கு தப்பி வந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் புதுப்பேட்டை பகுதிக்கு வந்த பிரபாகர், அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீட்டிற்கு அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் தயவு செய்து போனை கொடுங்கள் என்று கேட்டு வாங்கியுள்ளார். அவருடைய அண்ணன் முனுசாமியை தொடர்பு கொண்டு, ‘நான் நம்ம ஊரில் ஏற்பட்ட ஒரு அடிதடி வழக்கில் மாட்டிக் கொண்டேன். என்னை போலீஸ் தேடுகிறது தயவு செய்து என்னை காப்பாற்று’ என்று அழுது புலம்பியுள்ளார்.
உடனே அவருடைய அண்ணன், சரி நீ அங்கேயே இரு என்று கூறிவிட்டு உடனே திருத்தங்கல் காவல் உதவி ஆய்வாளர் காளிமுத்துவிடம் தனது தம்பி சென்னையில் உள்ள புதுப்பேட்டை பகுதியில்தான் இருக்கிறான். இப்போதுதான் என்னிடம் செல்போனில் பேசினார் என்று கூறி தனது மொபைல் போனுக்கு வந்த நம்பரை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டு, ‘உங்களிடம் செல்போன் வாங்கி பேசிய நபர் மீது திருத்தங்கல் காவல்நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளது. அவரைதான் நாங்கள் தேடிக்கொண்டு இருக்கிறோம். எனவே அவரை பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள்’ என்று கூறியுள்ளார். அதன்படி அப்பகுதி பொதுமக்கள் பிரபாகரை பிடித்து அருகில் உள்ள எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி