நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கடல் சீற்றத்தால் 10க்கும் மேற்பட்ட படகுகள் உடைந்தன. மேலும் பல படகுகள் கடலுக்குள் மூழ்கியதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் கடற்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் உள்ளனர். இவர்கள் நாட்டு படகுகள் மூலம் அதிகாலையில் மீன்பிடிக்க சென்று விட்டு பின்னர் கரை திரும்புவது வழக்கம். தனது படகுகளை கடற்கரை பகுதியில் மீனவர்கள் நிறுத்தி இருப்பார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பள்ளம் பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகளால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றோடொன்று மோதின. இதில் படகுகள் உடைந்தன. மேலும் 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை கடல் அலை இழுத்து சென்றது.