எண்ணூர்: எண்ணூர் காவல் சரகத்தில், நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் வெற்றி (33). நேற்று முன்தினம் இரவு மணலி எம்எப்எல் சந்திப்பில் சாதாரண உடையில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களை வெற்றி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த காவலர்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரது செல்போனை பறித்து வீசி எறிந்தனர். இதில் வெற்றி அதிர்ச்சி அடைந்து, ‘‘நானும் உங்களை போன்று போலீஸ்காரர்தான். எதற்கு எனது செல்போனை பிடுங்கி வீசினீர்கள்?’’ என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவர்கள், ‘‘நீங்கள் போலீஸ்காரர் என தெரியாமல் செய்து விட்டோம். மன்னித்து விடுங்கள்’’ என கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.