குவைத்தில் உலகின் 4-வது மிக நீளமான கடல் பாலம் அடுத்த ஆண்டு திறப்பு

குவைத்: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் வரும் 2019 பிப்ரவரி இறுதியில் திறக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் வேகமாக வளரும் நாடுகளில் முக்கியமான இடத்தை வகிக்கிறது குவைத். அந்த நாட்டின் சீரிய வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உள்ளது. இந்நிலையில் உலகிலேயே நான்காவது நீளமான கடல் பாலம் ஒன்று அந்நாட்டில் கட்டப்பட்டுள்ளது.

ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில் இந்த பாலத்தை கட்டும் பணி தொடங்கியது. இந்த பாலத்தை கட்ட 5 வருடங்கள் ஆகியுள்ளன. சுமார் 300 கோடி டாலர் செலவில் இந்தப் பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலம் அமைக்கபட்டுள்ளது.

குவைத் சாட்டிலுள்ள சுபையா நகரம் பட்டு நகரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் மக்கள் வாழ முடியாத பகுதியாக இந்த பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு, அதிக முதலீடுகளை கவரும் விதத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. குவைத் நகரையும், சுபையா நகரத்தையும் இணைக்கும் வகையில் அங்கு ஏற்கனவே ஒரு தரை வழிப்பாதை இருக்கிறது. அவ்வழியே சுபையாவை சென்றடைய 70 நிமிடங்கள் ஆகும்.

ஆனால் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கடல் பாலம் மூலம் 20 நிமிடங்களில் சுபையா நகரை சென்றடைந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் 36 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 27 கிலோ மீட்டர் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் வரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வகையில் சில நாட்களாக சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: