சென்னை: வார்டு மறுவரையறையின் முடிவில் சென்னை மாநகராட்சியில் 119 வார்டுகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டடுள்ளன. மேலும் மண்டலம் வாரியான எல்லைகளின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டு மறுவரையறை செய்து தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதெல்லாம், வார்டு மறுவரையறை செய்த பின்னர் தேர்தல் நடத்த உள்ளதாக என்று தமிழக அரசு தெரிவித்து வந்தது.இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறைக்கான கருத்துரு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த கருத்துருவின் மீது, பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதன்படி பெறப்பட்ட கருத்துருக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வார்டு மறுவரையறை தொடர்பான அறிக்கையை, வார்டு மறுவரையறை ஆணையம் தயாரித்தது.