வேளச்சேரி: மேடவாக்கம் ஊராட்சி 6வது வார்டு மந்தவெளி தெரு, ராமதாஸ் தெரு சந்திப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் சமூக நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் இரவு நேரங்களில் காரில் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடனே வசிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மேடவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் திருமண மண்டபங்கள் பல லட்சம் வாடகைக்கு விடப்படுவதால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை சிரமப்பட்டு நடத்த வேண்டி உள்ளது.