சென்னை: குழந்தைகளுக்கான தாய்பால் உரிமை, மற்றும் பேறுகால விடுப்பு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தரவில்லை என்றால் சம்பத்தப்பட்ட துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த 2015ல் எம்.பி.பிஎஸ் படிப்பை முடித்த பெண் டாக்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘2 ஆண்டு பணிகாலத்தில் 180 நாட்கள் பேறுவிடுமுறை எடுத்ததால் நான் இரண்டு ஆண்டுகள் முழுமையாக பணி செய்யவில்லை என்று என்னை பயிற்சி மருத்துவ பணியில் இருந்து விடுவித்து சான்று அளிக்கவில்லை. எனவே எனக்கு 2 ஆண்டுகள் மேல் படிப்பு படிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்’. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பெண்கள் மேம்பாட்டு ஆணையம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.