ஆலந்தூர்: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளையில் மாநகர பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தி.நகர், பாரிமுனை, தாம்பரம், பூந்தமல்லி, வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சுற்றுப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினசரி இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், இரவு நேரத்தில் குடிமகன்கள் பேருந்து நிலையத்தினுள் அமர்ந்து மது அருந்துவதுடன், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு செல்வதால், எங்கு பார்த்தாலும் காலி பாட்டில்களாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு மது அருந்தும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால், இரவு நேரத்தில் பயணிகள் பஸ் நிலையத்தினுள் வர அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் பஸ் நிலையத்தினுள் வர அச்சப்பட்டு சாலையிலேயே பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.