சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.36 லட்சத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை சேர்ந்தவர் சிந்துஜா (35); இலவச பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்துகிறார். இவரது சித்தி மகன் அருண், திருவண்ணாமலையை சேர்ந்தவர். இவர் கடந்த வருடம் சென்னை காரனோடையை சேர்ந்த முத்துக்குமார் (29) என்பவரை சிந்துஜாவுக்கு அறிமுகம் செய்தார். சிந்துஜாவிடம் பேசிய முத்துக்குமார், தான் சிங்கப்பூரில் பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளதாகவும், அங்கு நி வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். அந்த கம்பெனி பெயரில் தான் போலியாக உருவாக்கிய இன்டர்நெட் முகவரியை கொடுத்து, வேலை தேவைப்படுபவர்கள் தனது வங்கி கணக்கில் ₹1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதை நம்பிய சிந்துஜா, தனது நிறுவனத்தில் பயிற்சி பெறும் 36 பேரிடம் ₹1 லட்சம் வீதம் வாங்கி ₹36 லட்சத்தை முத்துக்குமாரின் வங்கிக்கணக்கில் கடந்த ஜனவரி 6ம் தேதி டெபாசிட் செய்துள்ளார். ஆனால் முத்துக்குமார், வேலை வாங்கித்தராமல் அழைக்கழித்துள்ளார். பணத்தை திருப்பிக்கேட்டபோது பணம் தர மறுத்த முத்துக்குமார், போலீசில் காட்டிக்கொடுத்தால் கொலை செய்து விடுவதாக சிந்துஜாவை மிரட்டியுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் சிந்துஜா புகார் செய்தார். இதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் திட்டப்படி நேற்று முத்துக்குமாரிடம் பேசிய சிந்துஜா, மேலும் பலருக்கு வேலை வாங்கித் தரவேண்டும் என்று கூறி, இதுகுறித்து நேரில் பேச வருமாறு அழைத்துள்ளார். சிந்துஜாவை பார்க்க பள்ளிக்கரணைக்கு முத்துக்குமார் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர். பணத்தை உல்லாசமாக செலவு செய்ததாக கூறிய அவர் சிந்துஜாவின் சித்தி மகன் அருண்குமாரிடம் பாதி பணத்தை கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். முத்துக்குமாரிடமிருந்து ₹45,000 பறிமுதல் செய்த போலீசார் அருண்குமாரை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி