விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபுவுக்கு சம்பள பாக்கி தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது: நடிகர் சங்கம் அறிக்கை

சென்னை: ‘’விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு போன்ற நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதால், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது’’ என்று, தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்த ‘’துப்பறிவாளன்’’ படத்தில் விஷால், ‘’வீரசிவாஜி’’ படத்தில் விக்ரம் பிரபு நடித்தனர். அவர்கள் நடிகர் சங்க உறுப்பினர்கள். அவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஊதிய பாக்கி வழங்காமல் இருக்கிறது.  மேலும், ‘’96’’ படத்தில் நடித்த சங்க உறுப்பினர் விஜய் சேதுபதி, ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மேற்கண்ட படங்கள் வெளியிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து  ஊதியம்  வழங்காமல்  படங்களை வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாக குழு கூடி ஆலோசனை செய்தது. அதன் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இதுபோன்று செயல்படும் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்துக்கும், தயாரிப்பாளருக்கும் நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், அதாவது நடிகர்கள், நடிகைகள் எந்தவொரு நிகழ்வுக்கும், படங்களுக்கும் ஒத்துழைப்பு ெகாடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்  தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்தவொரு நிகழ்வுக்கும், படங்களுக்கும் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று, நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: