சென்னை: ‘’விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு போன்ற நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதால், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது’’ என்று, தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்த ‘’துப்பறிவாளன்’’ படத்தில் விஷால், ‘’வீரசிவாஜி’’ படத்தில் விக்ரம் பிரபு நடித்தனர். அவர்கள் நடிகர் சங்க உறுப்பினர்கள். அவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஊதிய பாக்கி வழங்காமல் இருக்கிறது. மேலும், ‘’96’’ படத்தில் நடித்த சங்க உறுப்பினர் விஜய் சேதுபதி, ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மேற்கண்ட படங்கள் வெளியிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை வெளியிட்டுள்ளது.