சென்னை: சென்னைக்கு நேற்று காலை வந்த ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் நேற்று காலை 9 மணியளவில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பெருநகர சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் வந்தது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ரயிலை எண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தும்படி டிரைவருக்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், ரயில்வே போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜோத்பூர் ரயில் நேற்று காலை 9.30 மணியளவில் எண்ணூர் ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே போலீசார் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். திடீரென ரயிலில் இருந்து எதற்காக இறங்கச் சொல்கிறார்கள்என பயணிகள் முதலில் குழம்பினர்.