சென்னை: பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கவிஞர் மீது இயக்குனர் சுசிகணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மீ டூ ஹேஷ்டேக் மூலம் நடிகைகள், பாடகிகள் உள்பட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை தனது டிவிட்டரில், இயக்குனர் சுசிகணேசன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குனர் சுசிகணேசன் உதவி இயக்குனர், பாடல் ஆசிரியர் என இரு வாய்ப்புகளை லீனா மணிமேகலை கேட்டார். இரண்டுமே என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்ப முடியாமல், ஏனோ என் மீது வன்மையை துப்பியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.