அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி செங்குளத்தைச் சேர்ந்தவர் சிக்கிரான் (40). இவருக்கு சிக்கிரா (35) என்ற மனைவியும் மேகலா (11), சுதா (15) ஆகிய 2 மகளும் உண்டு. சிக்கிரான், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையறிந்த சிக்கிரா கடந்த 6 ஆண்டுக்கு முன்பாக கணவரை பிரிந்து, திருச்சங்கோட்டில் ஒரு மில்லில் தங்கி பணியாற்றி வருகிறார். சிக்கிரான் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகள் மேகலா அந்தியூர் பள்ளிபாளையத்தில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் 6ம் வகுப்பும், சுதா முகாசிப்புதூரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட சிக்கிரான் தன்னையும், தனது மகள்களையும் கவனிக்க யாரும் இல்லையே என்பதை எண்ணி மனமுடைந்து காணப்பட்டார்.
கடந்த 2 நாளுக்கு முன் மகள்கள் இருவரையும் கோவிலுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் புதுப்பாளையம் கொன்னமரத்தய்யன் கோயிலுக்கு அழைத்து சென்ற சிக்கிரான், விஷ மாத்திரைகளை உணவில் கலந்து மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதில் 3 பேரும் கோயில் அருகே மயங்கி விழுந்துள்ளனர். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள், மயங்கி கிடந்த மூவரையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் வழியிலேயே மேகலா உயிரிழந்துள்ளார். சுதா மற்றும் சிக்கிரான் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை சுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிக்கிரான் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி