சென்னை: ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் போது கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று விசாரணை ஆணையம் விளக்கம் கேட்டு, கவர்னர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அக்டோபர் 1ம் தேதி, அக்டோபர் 22ம் தேதி ஆகிய நாட்களில் அப்போதைய கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தாரா என்பது மட்டும் ஆணையம் நடத்திய விசாரணையில் கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோன்று ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாக நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது, ஆணையத்திற்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் போது, கவர்னர் சார்பில் ஏன் அறிக்கை வெளியிடவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு ஆணையம் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவ குறிப்புகள் கவர்னர் அலுவலகத்திற்கு வரப்பட்டது, மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின் பொறுப்பு ஆளுநர் என்பதால் அவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவரிடம் இருந்து பதில் வந்ததா, மருத்துவமனையில் ஆளுநர் முதல்வரை பார்த்து விட்டு சென்ற பிறகு கவர்னர் அலுவலகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா, முதல்வர் உடல்நிலை மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை, அப்போலோ குறித்தும் எய்ம்ஸ் மற்றும் கவர்னர் அலுவலகத்திற்கும் இடையே கடித தொடர்பு ஏதேனும் இருந்ததா? அப்படி ஏதேனும் பெறப்பட்டிருந்தால் குடியரசு தலைவர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா, இந்த விசாரணை குறித்து உங்கள் தரப்பு விளக்கங்களை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.