சென்னை : அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோரை விடுவித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001 பிப்ரவரி 19ம் தேதி ஒகேனக்கல் தேசநாதீஸ்வரர் கோயில் நிலத்தை ஏலம் விடுவதை ரத்து செய்யக்கோரி தர்மபுரி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்புமணி என்பவரிடம் முல்லைவேந்தன் முறையிட்டார். ஆனால், அவரது பேச்சை அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்புமணி கேட்கவில்லை. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், முல்லைவேந்தன் உள்ளிட்டோர் அன்புமணியை தாக்கியதாக முல்லைவேந்தன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.