சென்னை: மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் மத்திய அரசும் 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அறிவிப்பாணையை எதிர்த்து வக்கீல் எஸ்.துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் இளங்கோவன் ஆஜராகி, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி பெறவில்லை. கட்டிடப் பணிகள் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர் பரப்பில் நடைபெறவுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கடலோர மண்டலப் பகுதியில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். கடலோர மண்டல மேலாண்மை அமைப்பிடமும் அனுமதி பெற வேண்டும்.