சென்னை: தமிழகத்தின் நான்கு இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் சென்னை, திருத்தணி, திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கத்திரி வெயில் முடிந்த பின்பும் தொடர்ச்சியாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். வெளியே செல்லும் பெண்கள் குடை பிடித்த பிடியும், துணியால் முகத்தை மூடியபடியும் வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றனர். இதற்கிடையில், கேரளாவில் பருவமழை வலு குறைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பொழிவு குறைந்துள்ளது. கடந்த 2 வாரமாக அங்கு தினமும் சராசரியாக 100 மிமீ மழை பெய்தது.