சென்னை: லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி வழக்கில் இருந்து விடுவிக்க சசிகலா கணவர் நடராஜனின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் இருந்து கடந்த 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லக்சஸ் சொகுசு காரை 1993ம் ஆண்டு தயாரித்ததாகக் கூறி போலி ஆவணங்கள் மூலம் குறைவான சுங்கவரி செலுத்தியதாக புகார் எழுந்தது. அதில் அமலாக்கத்துறைக்கு ரூ. 1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், அக்கா மகன் வி.என்.பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை கடந்த 1995-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.