பெரம்பூர்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக, புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி பூங்காவில் குப்பைகள் தரம் பிரித்து மலைபோல் கொட்டப்பட்டுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் பயன்படுத்த முடியாமல் பல மாதங்களாக மூடியே கிடக்கிறது.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் எதிரே புளியந்தோப்பு சாலையில், மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடுவதற்கும், முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் இந்த பூங்காவை பயன்படுத்தினர். இதற்கிடையில், வீடுகளில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அதில் திடக்கழிவு மேலாண்மை மூலம் உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, அப்பகுதியில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து, இந்த பூங்காவில் கொட்டி வைத்தனர். ஆனால், அதில் உரம் தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.