
‘பிச்சைக்காரன்’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அளித்துள்ள பேட்டியில், ‘எனக்கு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை பிடிக்காது. எளிமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். திரைப்பட தொழிலுக்காகவே சென்னையில் வசிக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் பொள்ளாச்சி போன்ற ஒரு இடத்தில் நிரந்தரமாக குடியேறிவிடுவேன். உண்மையிலேயே அதற்காக இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
கள்ளக்குறிச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது, அங்குள்ள சூழ்நிலை மிகவும் அற்புதமாக இருந்தது. எனவே, கிராமத்து வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். கிராமத்தில் இருப்பவர்கள் நகரத்துக்கு வரலாம். அங்கு மால்கள் இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள். இங்கு எதுவுமே இல்லை. கிராமத்தில்தான் நல்ல காற்று, மக்கள் எல்லாம் இருக்கின்றனர். அங்கு பரபரப்பு இருக்காது. கிராமத்து மக்களின் வாழ்க்கையே நல்ல வாழ்க்கை’ என்று பேசியுள்ளார். ஏற்கனவே சசிகுமார், பசுபதி, குரு சோமசுந்தரம், பவா செல்லத்துரை போன்றவர்கள் கிராமத்து வாழ்க்கையில் இணைந்துவிட்டனர்.

