‘வீர தீர சூரன்: பகுதி 2’ என்ற படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் புதுப்படத்தை ஆனந்த் சங்கர் எழுதி இயக்குகிறார். முன்னதாக அவரது இயக்கத்தில் ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’, ‘எனிமி’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இந்நிலையில், நேற்று விக்ரம் பிறந்தநாளில் சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘இருமுகன்’ படத்ைத தொடர்ந்து மீண்டும் ஆனந்த் சங்கர், விக்ரம் இணைந்துள்ளனர். போடி ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 63வது படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
இதை சாந்தி டாக்கீஸ் தயாரிப்பதாக இருந்தது. அடுத்து ‘96’, ‘மெய்யழகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 64வது படத்தின் அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஆனந்த் சங்கர் வெளியிட்டிருந்த பதிவில், ‘நான் பெரிதும் மதிக்கும், போற்றும் மற்றும் உத்வேகம் பெறும் ஒருவரின் பிறந்தநாள் இன்று. அவர் நிஜமாகவே ஒரு ஜாம்பவான். நான் உண்மையை சொல்வது என்றால், அவரை போன்ற ஒருவருக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?’ என்று கேள்வி கேட்டிருந்தார்.
