×

ஆபாசமாக கேள்வி கேட்ட தொகுப்பாளர் செருப்பால் அடிக்க பாய்ந்த பாடகி: பாடல் நிகழ்ச்சியில் பரபரப்பு

பாட்னா: பீகார் மாநிலம் சாராண் மாவட்டத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், புகழ்பெற்ற போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய் பங்கேற்று பாடல்களை பாடினார். அவரது குரலுக்கு ரசிகர்கள் அதிகம். அதனால் அவர்கள் பாடல்களை கேட்டு அவர்கள் ஆர்ப்பரித்தபடி இருந்தனர். நிகழ்ச்சியின் இடையே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷாவிடம் அநாகரிகமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். ‘உங்கள் ரேட் என்ன?’ என்று ஆபாசமாக கேட்டுள்ளார். இதைக் கேட்டு மேடையிலேயே கடும் கோபமடைந்த நிஷா உபாத்யாய், அந்த தொகுப்பாளரை கடுமையான வார்த்தைகளால் திட்டி, உடனடியாகத் தனது செருப்பைக் கழற்றி அவரை தாக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனே நிஷாவை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவரது கோபம் தணியவில்லை.

அந்த நபர் இங்கு இருந்தால் நிகழ்ச்சியில் தொடர்ந்து பாட மாட்டேன் என நிஷா திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து அந்த தொகுப்பாளர் வெளியேற்றப்பட்டார். பின்னர் அந்தத் தொகுப்பாளர் விளக்கமளித்தபோது, நிஷா ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகிறார் என்றுதான் கேட்க நினைத்தாராம். ஆனால், வார்த்தை தவறி அதுபோல் கேட்டுவிட்டதாக கூறினார். தொகுப்பாளரை நிஷா தாக்க முயலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 29 வயதான நிஷா, கடந்த 2016-ஆம் ஆண்டு போஜ்புரி திரையுலகில் அறிமுகமானார். ‘லே லே ஆயெ கோகா கோலா’, ‘நவ்கர் மந்திர’, ‘பியார் மே ஹோயி பத்னாமி’ என இவரது பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவர் சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடியுள்ளார்.

Tags : Patna ,Nisha Upadhyay ,Saran district of ,Bihar ,Nisha ,
× RELATED வெப்தொடர்: விமர்சனம்