சென்னை: எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘அரிசி’. இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் ேகாட்டம் அரங்கில் நேற்று நடந்தது. அப்போது இசைத்தட்டை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, வைகோ பெற்றுக்கொண்டார். தொல்.திருமாளவளவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பெ.சண்முகம், பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், சலீம், பழ.ஆசைத்தம்பி, சமுத்திரக்கனி, ஆர்.கே.செல்வமணி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்றுகிறேன். முத்தரசன் அரசியலில் இருந்து திரைத்துறைக்கு வந்திருக்கிறார். என்றாலும், அவர் அரசியலில் இருந்தபடி மக்கள் பணியாற்றுவதை விட மாட்டார். மக்கள் அரிசிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது பண்ணையார்களிடம் அடிமைகளாக இருந்து அரிசிக்காக அவர்கள் பாடுபட்டனர். 1969ல் திமுக ஆட்சி அமைத்தபோது, அவர்களின் அரிசி கனவு நிஜமானது. பிறகு 2006ல் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கினார் கலைஞர். இப்போது விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
