அழகிய சிங்கனின் இனிய தலங்கள்

நரசிம்ம ஜெயந்தி மே மாதம் 14ம் தேதி வருகிறது. ஸ்ரீவைஷ்ணவ நரசிம்ம ஜெயந்தி மே 15ம் தேதி எல்லா திருமால் ஆலயங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்தந்த கோயில் வழக்கப்படி கொண்டாடப்படும்.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி 14-5-2022 - 15-5-2022

G.ராகவேந்திரன்

ஸ்ரீ நவநரசிம்மர், தாழம்பூர் - சென்னை.

மூலவர் நரசிம்மர் நடுவில் ஸ்ரீ தேவி பூதேவி சகிதமாகவும், அவரைச்சுற்றி பிராகாரத்தில் எட்டு நரசிம்மர்கள் உள்ளனர். மூலவர் உள்பட ஒன்பது நரசிம்மர்கள் இவ்வாலயத்தில் அருட்பாலிப்பதால் ஸ்ரீ நவநரசிம்மர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயில். அஹோபிலத்தில் நவ நரசிம்மரைச் சேவிக்க முடியாதவர்களுக்கு இத்தலம் ஓர் வரப்பிரசாதம். ஸ்ரீ நவநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள (ஓ.எம்.ஆர்.) நாவலூர் அடுத்த தாழம்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.

ஸ்ரீ வேணுகோபால சுவாமி, படவேடு - திருவண்ணாமலை.

மூலவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருடன், மகாலட்சுமி வலப்புறம்  அமர்ந்த நிலையில் இத்தலத்தில் அருட் பாலிக்கிறார். ஸ்ரீ வேணுகோபாலசுவாமி என்றழைக்கப்படும் இத்திருக்கோயில் சென்னை காட்பாடியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள சந்தவாசலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது படவேடு.

லட்சுமி நரசிம்மர், நரசிங்கபுரம் - சென்னை.

இத்தலம் லட்சுமி நாராயணர் தலம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி பிரமாதமாக கொண்டாடப்படுகிறது. அன்று லட்சுமி நரசிம்மருக்கு புஷ்ப அலங்காரம் மிக விமரிசையாக நடைபெறும். அர்த்த மண்டபம் முழுவதும் பூவால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தக்கோயில் கெம்பராஜபுரத்தில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் அமர்ந்த நிலையில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கின்றார். சென்னை - மும்பை டிரங்க் சாலையில் வாலாஜாப்பேட் பகுதியில் வரும் முகுந்தராயபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கெம்பராஜபுரத்தில் இக்கோயில் உள்ளது.

அழகிய நரசிம்மப் பெருமாள், எண்ணாயிரம் - விழுப்புரம்

அஷ்டஸஹஸ்ரர் என்கிற பிராமணர் வாழ்ந்தபகுதி என்கிற பொருளில் எண்ணாயிரம் என்கிற பெயர்க்காரணம் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டின்படி இந்த நரசிம்மரை ராஜராஜ விண்ணகர ஆழ்வார் என்றும் இந்த இடம் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் போற்றப்பட்டுள்ளது. பிரம்ம லட்சுமியுடன் நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறார். விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது எண்ணாயிரம்.

ஸ்ரீஉக்ர நரசிம்மசுவாமி, உம்மடிவரம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரா.

பரத்வாஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் நாற்கரங்கள். இம்மலையில் பெருமாள் இருப்பதைக் கண்டு முதியவர் தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து வந்தார். சுவாமியின் கருணையால் அவரே பூமிக்கு வந்து தங்கிவிட்டதாக வரலாறு. உக்ர நரசிம்ம சுவாமி சங்கு, சக்கர அபய வரத ஹஸ்தத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். அருகில் ஸ்ரீ தேவி பூதேவி உள்ளனர். ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் புல்லலசெருவு வட்டத்திலுள்ள உம்மடிவரம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

தியாகேசர், திருவாரூர்

ருண என்றால் கடன் என்று சமஸ்கிருதத்தில் பொருள். கடன் தீர்க்கும் இவர் விசேஷமானவர். பெரும் சக்தி மிக்க இவரை வேண்டிக்கொண்டு ருண விமோசன ஸ்லோகத்தைப் படிக்க கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.ருண விமோசன நரசிம்மர் அமர்ந்த திருக்கோலம், பாடல் பெற்ற தலமான கமலாலயத்தில் இந்த நரசிம்மர் உள்ளார்.

நரசிம்ம பக்த ஸமாஜம், சாலியமங்கலம் - தஞ்சாவூர்

இந்தத் தலத்தில் கி.பி.1645 முதல் 371 ஆண்டுகளாக ஓராண்டுகூட தவறாமல் பாகவத மேளா நடைபெறுகிறது. இந்த இடத்திற்கு அச்சுதபுரம் என்கிற பெயரும் உள்ளது. இந்த பாகவத மேளாவில் பிரகலாதன் சரித்திரம் நிகழ்கிறது. தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் 15 கி.மீ. கிழக்கே உள்ள சாலியமங்கலத்தில் அமைந்துள்ளது.

வனஜாக்ஷி லட்சுமி உடனுறை நரசிம்மர், கெஞ்சனூர் - ஈரோடு

இத்தல நரசிம்மர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இவ்வாலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் 800 ஆண்டுகளுக்கு முன் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலயத்தில் மேகலேஸ்வரி உடனுறை மேகலேஸ்வரரும் உள்ளார். சைவமும் வைணவமும் இணைந்துள்ள இத்தலத்தில் நரசிம்மர் சாந்த மூர்த்தியாக உள்ளார். காரிய சித்தி கிட்டும் இத்தலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் திருப்பணி நடைபெற்றுள்ளது. ராமானுஜர் கூரத்தாழ்வாருடன் மேல்கோட்டை அடைந்தபோது இத்தலத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்க வேண்டும்.

இந்தப் பாதையில்தான் அவர் கர்நாடக எல்லையினை அடைந்துள்ளார். நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுகமாக வீற்றிருக்க, மகாலட்சுமி அவரது மடியில் அமர்ந்த வண்ணம்உள்ளார். நாற்கரங்களுடன் வனஜாக்ஷி லட்சுமி உள்ளார். சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள கெஞ்சனூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது.

கதிர் நரசிங்கப்பெருமாள், கொத்தப்புள்ளி - திண்டுக்கல்

இக்கோயில் திண்டுக்கல் நவ நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுயம்பு மூர்த்தியான சிவன் விஷ்ணுவுடன் சேவை சாதிக்கும் தலம். இத்தலத்துப் பெருமாள் ஜன்மாஷ்டமி அன்று இங்கு எழுந்தருள்கிறார். கதிர் நரசிம்மர் என்பது சூரியக் கதிர்களைக் குறிக்கிறது. சூரியனின் உபாதைகளில் இருந்து நிவர்த்தி தரும் தலம் என்பது ஐதீகம். இத்தலத்து சக்கரத்தாழ்வார் தனி சந்நதியில் தீ ஜுவாலைகள் போன்ற கிரீட அமைப்புக் கொண்டவர். 16 கரங்களில் காயத்திரி மந்திரம் பொறிக்கப்பெற்றுள்ளார். பின்புறம் வழக்கம்போல் யோக நரசிம்மரும் உள்ளார். திண்டுக்கல்லிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ரெட்டியார் சத்திரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கதிர் நரசிங்கப் பெருமாள் சாந்த மூர்த்தியாக சிம்ம முகம் இல்லாமல் கமலவல்லித் தாயாருடன் உள்ளார்.

நாராயணப் பெருமாள், வத்தலகுண்டு - திண்டுக்கல்

இக்கோயில் மிகத் தொன்மை வாய்ந்த நரசிம்மர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இருப்பினும் நாராயணரே அருட்பாலிக்கிறார். இது புராதன கல்யாண நரசிம்ம க்ஷேத்திரம் எ்ன்று போற்றப்படுகிறது. முற்காலத்தில் எவ்வாறு தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் விற்பன்னர்கள் வாழ்ந்தனரோ அதுபோன்றோர் அனைத்துக் கலைகளிலும் பாண்டித்யம் மிக்கவர்கள் வாழ்ந்த பகுதியாக வத்தலகுண்டு கூறப்படுகிறது.

திண்டுக்கல்லிலிருந்து 32 கி.மீ. தொலைவிலுள்ள கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வத்தலகுண்டு ஊரில் அருட் பாலிக்கிறார் நாராயணப்பெருமாள்.

கல்யாண நரசிம்மர், அரியக்குடி, காரைக்குடி.

ஸ்ரீ ரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத் தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம். காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென்திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீ தேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.

லட்சுமி நரசிம்மர், திருநெல்வேலி

நெல்லையப்பர் உயரமும் இத்ததலத்து நரசிம்மரின் உயரமும் கர்ப்பக் கிரகத்தில் ஒரே மட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2 ஆலயங்களுக்கிடையே சுரங்கப்பாதை இருந்துள்ளது. கூரத்தாழ்வாரின் கனவில் தோன்றி தான் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகக் கூறினார். பெரிய ஆக்ரோஷத்துடன் தனது பக்தனைப் பார்த்ததும் ஆனந்தத்தில் வெளியில் வந்துள்ளார். பேரருளாளன் மற்றும் திருமங்கை மன்னனால் இக்கோயில் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.லட்சுமி நரசிம்மர் இடது தொடை மீது கை வைத்துள்ளார். தாயாரின் கண்கள் பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளன. நெல்லையப்பர் கோயில் மேல மாட வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

ஸ்ரீ எடையூரப்பன், மலப்புரம், கேரளா.

எடையூர் நரசிம்மம் எனப் பொதுவழக்கில் கூறினாலும் வெண்காடி என்ற இடத்தில் தான் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இத்தலத்து பெருமாளே எடையூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வலஞ்சேரியிலிருந்து நிலம்பூர் செல்லும் சாலையில் வெண்காடு என்கிற தலத்தில் இக்கோயில் உள்ளது. இது பெரிந்தால் மன்னவலஞ்சேரி பாதையாகும். குட்டிப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பெரிந்தால் மன்ன வலஞ்சேரி பாதையில் 18 கி.மீ. வந்தால் வலப்புறம் சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது.

ஸ்ரீ வேதகிரி நரசிம்மர், நரசிம்ம கொண்டா நரசிம்மபுரம் நெல்லூர், ஆந்திரா.

9ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் திருப்பணி செய்துள்ளான். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். 13ம் நூற்றாண்டு வரை விக்ரமசிங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. வடபெண்ணையில் நெல்லூர் தலப்பகிரி ரங்கநாதர் சேவை சாதிக்க தென் பெண்ணையாற்றின் கரையில் இப்பெருமாள் அருட்பாலிக்கிறார். புராணத்தின்படி மலையகிரி என்கிற ரெக்கைகள் கொண்ட மலை கன்னியாகுமரியிலிருந்து ஹிமாலயம் நோக்கி பறக்கும்போது நான்கு பாகங்கள் விழுந்து நரசிம்மர் தலங்களாக உருவாகியுள்ளன. அவை மங்களகிரி, யாதகிரி, நந்தகிரி மற்றும் வேதகிரியாகும்.

இரண்டு மூலவர் உள்ளனர். மேலே ஆஜானுபாகவாக எட்டடி உயர வேதகிரி நரசிம்மரும் கீழே லட்சுமி நரசிம்மரும் சேவை சாதிக்கின்றனர். பிரார்த்தனைத்தலம். இதய நோய், புற்று நோய் போன்ற நோய்களுக்கு நிவர்த்தி அளிக்கும் தலம். விஷக்கடியால் ஏற்பட்ட தொல்லைகளையும் போக்கும் தலம். வெங்கடாஜலபதி இம்மலையில் கால் பதித்து யாகங்கள் செய்துள்ளார். ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ராமர் விஜயம்

செய்துள்ளார். ஸ்ரீ வேதகிரி நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் இருவரும் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்கின்றனர்.ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் நரசிம்ம கொண்டா நரசிம்மபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

ஸ்ரீ உக்ர நரசிம்மர், பெண்ணா அஹோபிலம், அனந்தபூர், ஆந்திரா.

உரவகொண்டா அருகே உள்ள பெண்ணா நதியின் நீர்வீழ்ச்சி அருகே உள்ள 2800 அடி உயர மலை உச்சியில் உக்ர ஸ்தம்பத்திலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டதாகவும், இத்தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ரக்த குண்டம் என்கிற குளத்தில் நரசிம்மர் இரண்ய கசிபு வதத்திற்குப்பின் கைகளைக் கழுவியதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது. நரசிம்மரின் பாதம் மேல் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. (அதுபோன்ற சிலையும் ஆலயத்தில் உள்ளது.) அவரது பாதத்தின் அளவு 5 அடி 3 அங்குலம்.

அவரது மற்றோர் பாதம் கர்னூல் மாவட்ட அஹோபில திவ்ய தேசத்தில் உள்ளது. கி.பி 1472-ல் சதாசிவ ராயர் என்கிற விஜயநகர மன்னன் திருப்பணி செய்துள்ளான். கீழே உள்ள ஓர் சுரங்கம் வழியாக ஆலய அபிஷேக தீர்த்தம் பெண்ணையாற்றில் கலக்கிறது. எனவே உள்ளே தீர்த்தம் கிடையாது. உதாலக மகரிஷிக்கு நரசிம்மர் காட்சி கொடுத்த தலம். தாயார் பெயர் உத்பவ மகாலட்சுமி.

கல்லிலிருந்து உற்பத்தியாகி வெளிப்படுவது போன்ற தோற்றம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மன் போன்ற பலரின் கல்வெட்டுகள் 8ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை உள்ளன. நரசிம்ம புக்க என்கிற இடத்தில் மரத்தின் வேர்களிலிருந்து இன்றும் நீர் ஊற்று உள்ளது. இவ்விடத்தில் இரணிய வதம் நடந்தது என்பது ஐதீகம். ஏப்ரல் மாதம் பிரம்மோற்சவம்.

உக்ர நரசிம்மர் மகாலட்சுமியுடன் நாக்கை வெளியில் நீட்டிய வண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். அருகில் ஆதிலட்சுமி, செஞ்சுலட்சுமி உள்ளனர். எகுவ அஹோபிலம், திகுவ அஹோபிலம் மற்றும் இந்த ஆலயம் என 3 வகைகளாகக் கூறுவர். ஏறுவது, இறங்குவது (எகுவ, திகுவ) என்று பொருள். பிரகலாத வரத நரசிம்மர் திகுவ அஹோபிலத்தில் உள்ளார். இவர் உக்ர நரசிம்மர்.இக்கோயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையம் அடுத்த உரவக் கொண்டாவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெண்ணா அஹோபிலம் என்ற பகுதியில்அமைந்துள்ளது.

Related Stories: