அரசமரம், வேப்பமரம் எதற்கு சக்தி அதிகம்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இரண்டிற்குமே தனித்தனியே சிறப்பம்சம் என்பது உண்டு. அரசமரத்திற்கு அடியில் நாகர் சிலை அல்லது விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்குவதைப் பார்த்திருப்போம். அதேபோல வேப்பமரத்தினை அம்மனாக எண்ணி அதற்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து வணங்குவதையும் கண்டிருப்போம். இரண்டிற்கும் தனித்தனியே விசேஷ குணம் உண்டு என்றாலும், இரண்டும் ஒன்றாக இணைந்திருக்கும் பகுதிக்குத்தான் சக்தி அதிகம். சக்தி இல்லை யேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்ற கூற்றினை நிரூபிக்கும் விதமாக, சிவசக்தி ஐக்கியத்தினை வெளிப்படுத்தும் விதமாக வேப்பமரத்தின் அடிப் பகுதியானது அரசமரத்தின் அடிப்பாகத்தோடு இணைந்திருக்கும் பகுதியே தெய்வ சாந்நித்தியம் பெற்றிருக்கும் பகுதியாகும்.
இதுபோன்ற இடங்களில் இந்த இரண்டு விருட்சங்களுக்கும் விவாஹம் செய்து வைத்திருப்பார்கள். இவ்விரு மரங்களும் ஒன்றாக இணைந்திருக்கும் இடத்தினை ``சோமவார அமாவாசை’’ என்றழைக்கப்படும் திங்கட்கிழமையும் அமாவாசை திதியும் ஒன்றாக இணைந்துவரும் நாளில் வலம் வந்து வணங்கினால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதியர், அன்றைய தினம் ஸ்நானம் செய்து ஈர வஸ்திரத்துடன் முந்தானை முடிச்சிட்டு ஒன்றாக வலம் வந்து வணங்கினால் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இந்த இரண்டு மரங்குக்கும் தனித்தனியே சக்தி இருந்தாலும், இரண்டும் ஒன்றாக இணைந்திருப்பதே அதிக சக்தியை தரவல்லது என்பதே உங்கள் கேள்விக்கான பதில் ஆகும்.