நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் வரும் குரு பெயர்ச்சியின் பலனை அடைய இது ஒன்றே வழி.

இது வரை மகரத்தில் இருந்த குரு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்து விட்டார். குரு பெயர்ச்சி முக்கியமாகப் பார்க்கப்பட காரணம், அது ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது.மகா மகம், புஷ்கரம் போன்ற ஆன்மீக நிகழ்வுகள் குரு பெயர்ச்சியை  முன்னிட்டு நடைபெறுகின்றன. குரு சிறந்த சுப கிரகம். நவ கிரகங்களிலேயே முழு சுபர் குரு தான்.  மேலும் குரு தனது 5,7,9 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக் கூடியவர்.

அந்த வகையில் 2021ம் ஆண்டு குரு பெயர்ச்சியின் காரணமாக மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிக சிறப்பான அதிர்ஷ்டபலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது, தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப் போகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு. அந்த வகையில், மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான குரு பகவான், பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பெயர்ச்சியில் இன்னொரு விஷயமும் உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார் என்பது ஜோதிட விளக்கம். அதன் நடுவே குரு அதிசாரமாக, தான் இருக்கும் ராசிக்கு அடுத்த ராசிக்கு சென்று, பின்னர் வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தன் பழைய நிலை அடைவது வழக்கம். ஆனால் இந்த முறை இந்த அதிசார காலம் முன்பைவிட அதிகமாக இருக்கிறது.

குரு பகவான் 2021 நவம்பர் 13ம் தேதி (ஐப்பசி 27) முதல் ஏப்ரல் 14 (பங்குனி 30) வரை குரு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின் அதிசாரமாக மீன ராசிக்கு சென்று திரும்புவார். இப்போது நாம் வேறு ஒரு சூட்சுமமான விஷயத்தைப் பற்றி பேசுவோம். நீங்கள் நிறைய ராசிபலன் பார்த்திருப்பீர்கள். நிறைய சேனல்களில் உச்சத்தைத் தொடும் ராசி, உயரத்தைத் தரும் ராசி என்று உற்சாகம் பெருகும் வகையில் பேசி இருப்பார்கள். “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்பது வழக்கு. எனவே நீங்களும் ஆவலோடு பார்த்திருப்பீர்கள்.

சங்கடப்படும் மனதிற்கு உற்சாகம் தரும் சொல்லாக அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். “யாவர்க்குமாம் ஒரு இன்சொல்”என்றல்லவா  திருமூலர்  சொல்கிறார். நல்ல வார்த்தை தானே. என்ன கெட்டுப் போகப்போகிறது ? “நீ அமோகமாக இருப்பாய் என்றால் மனதுக்கு உற்சாகம் தானே” குருபெயர்ச்சி பற்றி நுட்பமான விஷயம் சொல்கிறேன். இது 40 வருட அனுபவத்தில் சொல்வது. குரு ஒரு ராசிக்கு கஷ்டமான அமைப்பில்   இருந்தாலும் அவரே ஏதோ ஒரு வகையில் ஈடு செய்து விடுகிறார். இது வேறு கிரகங்களுக்கு கிடையாது.

இப்போது குரு கும்ப ராசிக்கு வருகிறார் அல்லவா. ஒரு 5 மாதம் அங்கே இருப்பார். அடுத்த 2022 ஏப்ரலில் தனது ஆட்சி வீடான மீன ராசிக்குப்  போய்விடுவார். இப்போது கும்ப ராசிக்காரர்களுக்கு அதாவது அவிட்டம் 3ஆம் பாதம், சதயம், பூரட்டாதி முதல் மூன்று பாதங்கள் வரை கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருநடைபெற உள்ளது.

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை வைத்ததும்

தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்

இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்துபோம் படியானதுவும்   

ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே  இரந்து உண்டதும்

தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போகும்படி ஆனதுவும்
 

என்று இந்த பாட்டு போகும். ராவணனுக்கு 12-ஆம் இடத்தில் குரு இருக்கின்ற பொழுது அவன் விழுந்தான் என்று இந்த பாட்டில் வருகிறது. ராவணனுக்கு 12ல் குரு கெடுதி செய்தார்.ஆயுளை முடித்து விட்டார் ராமருக்கு ஜென்ம குரு. காட்டிற்கு அனுப்பிவிட்டார். இரண்டும் தீமையான அமைப்புதான். ஆனால் ஒரு தீமையான அமைப்பு தந்து, இன்னொரு கொடும் தீமையான அமைப்பு வெல்லப்பட்டது. அது தான் குருவின் சுப பலன். அவருடைய அசுப பலத்திலேயே சுபபலன் உண்டு.

இங்கே குரு ராமனுக்கு ஜென்மத்தில் இருந்ததால் ஒரு நன்மையைச்  செய்தார். ராமன் வன வாசம்  போகா விட்டால், ராவண வதம் எப்படி நடக்கும்?எனவே இரண்டையும் குரு செய்துவிட்டார். எனவே லோக ஷேமமாகிய விஷயத்தைச்  செய்வதில் குரு வல்லவர். இந்திரன் குருவின் ஆலோசனைகளை கேட்காதபோதும், அவரை அலட்சியப் படுத்தும் போதும் மிகுந்த துயரங்களை அனுபவிப்பதை புராண கதைகளில் பார்த்திருப்பீர்கள். “குருவே துணை” என்று இருந்தால் குரு துணை செய்வார். “குரு வேதனை” என்று இருந்தால் (அதாவது மதிக்காமல் அவரது ஆசி பெறாமல் இருந்தால்) வேதனை கொடுத்து விடுவார்.

ஒருவருக்கு எத்தனைத் துன்பத்திலும் குருவின் ஆசி இருந்தால் அவர் நல்ல யோசனைகளைத் தந்து, எல்லா தோஷத்திலிருந்தும் காப்பாற்றி விடுவார்.இப்போது கும்பத்திற்கு ஜென்ம குரு என்பதால், அவர் ஊரில் இருக்க முடியாத  ஒரு நிலைமையை ஏற்படுத்துவார், கஷ்டப்படுத்துவார் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.  அதே குரு 3,5,7ம்  இடங்களை பார்க்கிறார்.

எனவே, படிப்பு, உத்தியோகம், தைரியம், சகோதர ஒற்றுமை, குழந்தை பிறப்பு , திருமணம், கூட்டுத்தொழில் போன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கும் அல்லவா!எனவே, ஒவ்வொரு ராசிக்கும் அவர் வெவ்வேறு மூன்று இடங்களைப் பார்ப்பதால் அந்த இடங்கள் விருத்தியாகும்.

அந்த அந்த இடங்களுக்கான பலன்கள் அந்தந்த  ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம். இது ஒவ்வொரு ராசிக்குமான நேர் மறை விஷயங்கள். ஜன்ம குரு என்றாலே கூடுதல் பொறுப்புகள் கொடுப்பார். பணிச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வைப்பார். கடைசியில் கஷ்டப்படுத்தி பலன் தருவார்  என்பதைத்  தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு தகுந்தவாறு உங்கள் மன நிலையை மாற்றி தயார்படுத்தி கொள்ளுங்கள்.

ஜென்ம குரு ராமனை காட்டுக்கு அனுப்பி கஷ்டப்படுத்தினாலும், முடிவில் எத்தனை பெரிய சாதனைகளை செய்ய வைத்து புகழை தேடித்தந்தார். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து அவரவர்கள் ஜென்ம ஜாதக அமைப்பு நடைபெறும் தசாபுக்தி அமைப்பு பொறுத்து பலன்கள் மாறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத்  தெரிந்து கொள்ளாமல், “என்னமோ மேஷ ராசிக்கு “ஓகோ” என்று எழுதியிருந்தார்கள்.

ஒன்னும் நடக்கல” என்று ராசிபலன் எழுதியவர்களைத் திட்டாதீர்கள். பொதுவாக , நான் சொல்லும் கருத்து  இதுதான். கிரகப்பெயர்ச்சி பற்றி கவலைப்பட வேண்டாம். அது ஒரு சிறு நிகழ்வு. அது பாட்டுக்கும் வரட்டும். போகட்டும். ஆனால் குரு வணக்கத்தை  விட்டு விடாதீர்கள். குரு பெயர்ச்சி கொண்டாட வேண்டும் என்றால் இப்படிக் கொண்டாடுங்கள்.

நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் அது பலனளிக்கும்.

1. தினசரி

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மைஸ்ரீ

குருவே நம:

என்ற ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லுங்கள்.

2. வியாழக்கிழமை அன்று குரு ராகவேந்திரர் கோயிலுக்கோ, ஆஞ்சநேயர் கோயிலுக்கோ, தட்சிணாமூர்த்திக்கோ  சென்றுவழிபடுங்கள் .

3. வியாழக்கிழமையன்று யாருக்காவது ஒரு ஏழைக்கு மஞ்சள் நிற வஸ்திரம் தானம் செய்யுங்கள்.

4. வியாழன் காலை கொண்டைக்கடலை சுண்டல்  இறைவனுக்கு நிவேதனமாக படைத்து அதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. வியாழக்கிழமை அன்று வெண்மையான பூக்களை (முல்லை அல்லது மல்லிகை) வாங்கி இறைவனுக்குச்  சூட்டுங்கள்.

6. வியாழனன்று நீங்கள் குருவாய் கருதும் ஒரு பெரியவர் அல்லது ஞானத்தில் சிறந்த பெரியவர் ஒருவரை, குருவாகக்  கருதி, உங்களால் முடிந்த காணிக்கையைத்   தந்து, அவருடைய ஆசிகளைப் பெறுங்கள்.

ஒரு பேனாவைக் கூட  நீங்கள் அவருக்குத் தந்து ஆசீர்வாதத்தைப்  பெறலாம். அப்படிச் செய்தால் எந்த குருபெயர்ச்சியாக   இருந்தாலும்  உங்களுக்கு குரு

பெயர்ச்சி நன்மையையே தரும்.

Related Stories: