கிறிஸ்துவம் காட்டும் பாதை
‘‘தகுந்த வேளையில் நான் உனக்குப் பதில் அளித்தேன். விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன் என கடவுள் கூறுகிறார். ‘‘இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள்,’’ எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே, நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. மாறாக, அனைத்து சூழ்நிலைகளிலும், நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம். வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மனஉறுதியோடு தாங்கி வருகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டோம், சிறையில் அடைக்கப்பட்டோம், குழப்பங்களில் சிந்தினோம், பாடுபட்டு உழைத்தோம், கண் விழித்தோம், பட்டினி கிடந்தோம், தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள். வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம். உண்மையையே பேசி வருகிறோம்.
கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் அடைக்கலம். அதை வலக்கையிலும், இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். ‘‘போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.’’ புகழுவார் புகழலும், இகழுவார் இகழலும் எங்களைப்பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத்தோன்றினாலும் எல்லோரும் எங்களை அறிவர். செத்துக்கொண்டிருப்பவர்கள் எனத்தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத்தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத்தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத்தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத்தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். நாங்கள் உங்களிடம் மனம்விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை.நீங்கள் உங்கள் இதயக்கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. பிள்ளைகளுக்குச் சொல்வதைப்போல் சொல்லுகிறேன். எங்களைப்போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள். நம்பிக்கைக் கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக்கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு நெறி கெட்டோரோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோருக்கு நம்பிக்கைக் கொள்ளாதவரோடு என்ன தொடர்பு?’’ - (II கொரிந்தியர் 6: 2-15)தன் வீட்டிலிருந்த பணமெல்லாம் திருடுபோய் விட்டது என்று புலம்பிய ஒருவரிடம், ‘கடவுள் படியளப்பவன்’ என்றார் அந்த மனிதர். பணத்தைப் பறிகொடுத்தவர் இதை நம்பவில்லை. அவரைக்கூட்டத்தினரிடையே அழைத்துச் சென்று, இப்படிப்பட்ட அநியாயம் நடக்கலாமோ? இவர் பாடுபட்டுச் சேர்த்த பணம் திருடுபோய் விட்டதே! இதைக் கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? உடனே நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமென தரையில் உருண்டு, புரண்டு கூச்சலிட்டார். கூச்சலைக்கேட்டு எரிச்சலடைந்த கூட்டத்தினர் பணத்தை அங்கேயே வசூல் பண்ணி பணத்தை இழந்தவரிடம் கொடுத்தார்கள். அவர் திகைத்து நின்றார். நம்பிக்கை வந்ததா? என்றார். இந்நாடகத்திற்கு ஏற்பாடு பண்ணியவர்! ‘‘துடிப்பான எண்ணம் சோக கீதம் பாடாது. பாவம் செய்தோர் செய்வது பரிகாரம், மனிதனுக்கு மனிதன் செய்வது உபகாரம். வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே!’’
- ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ