×

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவணித் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, அதிகாலை 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தல், தொடர்ந்து கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். ஆவணி திருவிழா கொடியேற்றத்தையொட்டி சாமிதோப்பில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம், இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனி, உகப்படிப்பு, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, 24-ந் தேதி இரவு பரங்கி நாற்காலியிலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 27-ந் தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி கற்பக வாகனத்திலும், 29-ந் தேதி சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?