ஈசன், திருமால், அம்பிகை மூவருமே பக்தர்களைக் காக்க தங்கள் விழிகளாக சூரியனையும், சந்திரனையும் வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையன்றும் சந்திரசூரிய சந்திப்பு நிகழும். சித்திரை மாத பௌர்ணமி, சித்ரா பௌர்ணமியாக விமரிசையாக தலங்கள் தோறும் கொண்டாடப்படுகின்றது. மதுரையில் கள்ளழகர் ஆயிரம் பொன் தங்கச் சப்பரத்தில் மீனாட்சியன்னைக்கு சீர் கொண்டு வருவார். வைகையாற்றில் இறங்கும் போது அன்னையின் திருமணம் முடிந்ததைக்கேட்டு திரும்பி வண்டியூரில் சைத்யோபசார விழாக் காண்பார். பகவானின் தசாவதார திருக்கோலங்களை அன்று பக்தர்கள் தரிசிக்கலாம். இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சித்ரா பௌர்ணமியன்று மதுரைக்கு வந்து சுந்தரேஸ்வரரை பூஜிப்பதாக ஐதீகம்.