நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் நேற்றிரவு அப்பர் பெருமான் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முற்காலத்தில் சைவ, சமண மதத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தினர், சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் பக்தியை பரிசோதிக்கும் வகையில், அவரை கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்பர் பெருமான் சிவபெருமானை நினைத்து மனமுறுகி பாடினார். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதக்க துவங்கியது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் பெருமையை உலகிற்கு உணர்த்தி, கடவுளின் திருக்காட்சி பெற்றார்.