ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து 3ம் திருநாள் : நம்பெருமாள் ஒய்யார சவுரிகொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்தார்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து மூன்றாம் நாளான நேற்று நம்பெருமாள் ஒய்யார சவுரிகொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 8ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தில் 3ம் நாள் திருவிழாவான நேற்று நம்பெருமாள் ஒய்யார சவுரிகொண்டை அலங்காரத்தில் ரத்தின அபயஹஸ்தம், பெருமாள், மகாலட்சுமி பதக்கம், அண்டபேரண்டபக்சி பதக்கம், வைர ஒட்டியாணம், தங்ககாசு மாலை, முத்து, பவள மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார்.

 

அதன்பின் காலை 7.45 மணிமுதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் சேவையுடன் பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு உபயக்காரர்கள் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு மாலை 6 மணிவரை காட்சி அளித்தார். அதன்பின், இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொதுமக்கள் மூலவரை காலை 7 மணிமுதல் மாலை 5.30 மணிவரையிலும், மாலை 6.45 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: