பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 1.525 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று (29ஆம் தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல்துறை நடத்திய சோதனையில், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் ஊரக காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட லாடப்புரம் கிராமம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் கதிரேசன் (49) என்பவர் தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது.
தொடர்ந்து பெரம்பலூர் ஊரகக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், பெட்டிக் கடைக்காரர் கதிரேசனை கைது செய்து வழக்கு பதிந்து, அவரிடமிருந்து ஹான்ஸ் 1.400 கிலோ மற்றும் விமல் பாக்கு -125கிலோ என மொத்தம் 1.525 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குட்கா பொருள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர் கைது appeared first on Dinakaran.
