பெங்களூரு: பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை என்று சித்தராமையா பேசியது அந்நாட்டு சேனல்களில் வைரலானதை தொடர்ந்து பாஜ தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் போர் வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும், போர் தீர்வாகாது என்றே கூறியதாகவும், தவிர்க்க முடியாத சூழலில் போர் வரலாம் என்று கூறியதாகவும் முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவரும் நிலையில், போருக்கான அவசியம் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறியதை பாஜ தலைவர்கள் மிகக்கடுமையாக விமர்சித்தனர். கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக பேசிய முதல்வர் சித்தராமையா, போருக்கான அவசியம் இல்லை. கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. நாட்டில் அமைதி நிலவ வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே ஒன்றிய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
முதல்வர் சித்தராமையாவின் பேச்சை பாஜ தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். சித்தராமையாவின் கருத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், உங்களுக்கு (சித்தராமையா) வாழ்த்துகள் சித்தராமையா. நீங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றால் கண்டிப்பாக மிகச்சிறப்பான முறையில் உபசரிக்கப்படுவீர்கள். பாகிஸ்தான் மிக உயர்ந்த கவுரவ விருதை உங்களுக்கு வழங்கி கவுரவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பதிவிட்டு பாகிஸ்தான் செய்தி சேனலில் சித்தராமையாவின் பேட்டி ஒளிபரப்பப்பட்ட வீடியோவை பகிர்ந்து ஆர்.அசோக் விமர்சித்திருந்தார்.
போர் தேவையில்லை என்று சித்தராமையா பேசியதை பாகிஸ்தான் ஊடகங்கள் ஒளிபரப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் சித்தராமையா, ‘போர் தேவையில்லை என்று நான் கூறியது, தவிர்க்க முடியாத பட்சத்தில் போர் வரலாம்; ஆனால் போர் மூலம் தீர்வு காண முடியாது என்று அர்த்தம். அந்த அர்த்தத்தில் தான் நான் கூறினேன். போர் அவசியமில்லை என்று நான் சொல்லவில்லை’ என்று விளக்கமளித்தார்.
The post போரை நான் ஆதரிக்கவில்லை; சித்தராமையா பேட்டி பாகிஸ்தானில் வைரல்: பாஜ எதிர்ப்பால் திடீர் பல்டி appeared first on Dinakaran.