திருவனந்தபுரம்: கடந்த சில தினங்களுக்கு முன் ஆலப்புழாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கலால் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சாவுடன் தஸ்லீமா சுல்தான் என்ற இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தஸ்லீமா சுல்தானுக்கும், பிரபல மலையாள நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருவரிடமும் தஸ்லீமா சுல்தான் வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங் நடத்தியதற்கான ஆவணங்களை கலால் துறையினர் கைப்பற்றினர்.
மேலும் நடிகர்கள் இருவருக்கும் தான் கஞ்சா சப்ளை செய்ததாக இவர் வாக்குமூலமும் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷைன் டோம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோரிடம் விசாரணை நடத்த கலால் துறையினர் தீர்மானித்தனர். வரும் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் கொச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தச் சென்றபோது நடிகர் ஷைன் டோம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் விசாரணைக்கு ஆஜரான அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விசாரணைக்கு ஆஜராக நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசிக்கு கலால் துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.