கோவை, ஏப்.18: கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). ஓட்டல் கடை தொழிலாளி. இவர் மகன் விஜயகுமார் (27). கூலி தொழிலாளி. இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்துள்ளார். சமீப காலமாக விஜயகுமார் மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் போதையில் தனது குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்து வந்தார். பெற்றோர் அறிவுரை கூறியும், கண்டித்தும் அவர் திருந்தவில்லை. நேற்று இரவு மது போதையில் இருந்த விஜயகுமார் தந்தையிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.
அவர் கண்டித்தும் விஜயகுமார் கேட்கவில்லை. அவரின் தொந்தரவு அதிகமானதால் கோபமடைந்த விஸ்வநாதன் வீட்டில் இருந்த அரிவாள் எடுத்து விஜயகுமாரின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஸ்வநாதனை கைது செய்தனர். என் மகனை பாசமாக வளர்த்தேன். அவர் இப்படி போதைக்கு அடிமையாகி வீணாகி போவார் என தெரியவில்லை. பெற்ற மகனை என் கையால் கொன்று விட்டேன் எனக்கூறி விஸ்வநாதன் போலீசாரிடம் கதறி அழுதார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மகனை வெட்டி கொன்ற தந்தை கைது appeared first on Dinakaran.