கண்டமனூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க வேண்டும்

வருசநாடு, ஏப். 12: கண்டமனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கண்டமனூர் கிராமத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு, வரைவோலை மற்றும் பல்வேறு வங்கி சேவைகளுக்கு கண்டமனூரில் தனியார் வங்கி ஒன்று மட்டும் செயல்பட்டு வருகிறது.

இப்பகுதியில் ஒன்றிய அரசின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் எதுவும் கிடையாது. இதனால் இப்பகுதி மக்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வங்கிகள் மூலம் பெறவும் மற்றும் பள்ளி மாணவர்கள் வங்கி கணக்குகள் தொடங்குவதற்கும் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையை நிறுவ வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கண்டமனூர் அங்குச்சாமி கூறுகையில், ‘‘அதிக மக்கள் தொகை நிறைந்த பகுதியான கண்டமனூர் மற்றும் இதனை சுற்றி கிராமங்கள் அதிக அளவில் உள்ளது. இவர்கள் அனைவரும் தேனியில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு வைத்துள்ளனர். இதனால் சிரமம் அலைச்சல் ஏற்படுகிறது. இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கண்டமனூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்கிட வேண்டும்’’என்றார்.

The post கண்டமனூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: