சென்னை: நீட் தேர்வு விலக்கு கோரி சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. பாமக ஜி.கே.மணி, சிபிஎம் நாகை மாலி, காங்கிரஸ் ராஜேஷ்குமார், மதிமுக சதன் திருமலைக்குமார், விசிக சிந்தனைச் செல்வன், த.வா.க. வேல்முருகன், ம.ம.க. ஜவாஹிருல்லா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம். ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை வெகுவாக பாதித்தது. மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநிலத்திடம் இருந்து ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தோம். ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளின்படி நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது
நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தனது அரசியல் சட்ட கடமையை செய்யாமல் அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஆளுநர். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. நீட் தேர்வுக்கு பயிற்சி பெறக் கூடிய வாய்ப்புகள் இருக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதே பாதக அம்சம்.
நீட் தேர்வு பொருளாதார வளமிக்கவர்களுக்கு சாதகமாக உள்ளது என்பதை ஏ.கே.ராஜன் குழு கண்டறிந்தது. சட்ட போராட்டத்தை தொய்வின்றி நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார்.
The post நீட் தேர்வு விலக்கு கோரி சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.