ஊட்டி : தாவரவியல் பூங்காவில் மலர்களே இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கள்ளி செடி அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகைச் செடிகள், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், அங்குள்ள புல் மைதானங்களில் ஓடியாடி விளையாடியும் மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் பார்வைக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும். இவ்விரு சீசன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் மலர்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வாடிக்கை. இதனால் பூங்காவிற்கு வருவதற்கு எல்லா பயணிகள் மகிழ்விக்க எப்போதும் கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்.
தற்போது முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த கண்ணாடி மாளிகையில் பல்வேறு மலர்களால் ஆன மலர் தொட்டிகளை கொண்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் கோபுரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
மேலும், கண்ணாடி மாளிகையில் கேக்டஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கள்ளிச் செடிகள் பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு இது மலர்களாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, சிவப்பு நிறத்தில் காணப்படும் கள்ளிச் செடிகள் மலர்களை போன்றே காட்சியளிக்கிறது. இதனை பிரமிப்புடன் பார்க்கும் சுற்றுலா பயணிகள், இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
The post தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாததால் கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகளை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.