கடலூரில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி விஜய் உடல் புதுச்சேரியில் அடக்கம்

 

புதுச்சேரி, ஏப். 5: கடலூரில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி விஜய்யின் உடல் நேற்று புதுச்சேரி சண்முகாபுரம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன் நகரை சேர்ந்தவர் மொட்ைட விஜய் (எ) விஜய் (26). இவர் மீது தன்வந்திரி நகர், ஆரோவில், சேதராப்பட்டு, கடலூர், விழுப்புரம், பாகூர், வில்லியனூர், கோட்டக்குப்பம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, அடிதடி, ஆயுதம் பதுக்கி வைத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கோரிமேடு போலீசார் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த மாதம் ஜாமீன் பெற்று விஜய் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மொட்டை விஜய் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 2ம் தேதி கடலூரில் லாரி ஓட்டுனர்களை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை கடலூர் போலீசார் பிடிக்க சென்றபோது விஜய் போலீசாரை வெட்டிவிட்டு இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றபோது, போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

தொடர்ந்து அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நெய்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி பிரவீன்குமார் முன்னிலையில் வீடியோ பதிவு மூலம் உடற்கூற ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் விஜய் உடல் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை ரவுடி விஜய்யின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, புதுச்சேரி சண்முகாபுரத்தில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே ரவுடி விஜயின் உடல் புதுவைக்கு வருவதையொட்டி எந்த அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கடலூரில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி விஜய் உடல் புதுச்சேரியில் அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: